Published : 03 Feb 2023 11:43 AM
Last Updated : 03 Feb 2023 11:43 AM

மேகாலயாவின் அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டி

புதுடெல்லி: மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி யிடுகிறது.

வடகிழக்கு மாநிலமான திரிபுரா வில் வரும் 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் வரும் 27-ம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மேகாலயா, நாகாலாந்து தேர்தல் குறித்து பாஜக செயலாளர் ரிதுராஜ் சின்ஹா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் மாநில அரசுகள் திறம்பட செயல்படாததால் பல்வேறு திட்டங்களின் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஊழல் விவகாரங்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள், பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதை முன்னிறுத்தி மேகாலயாவின் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். மோடியின் சக்தி என்பதை மையமாகக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடும். மீதமுள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும். மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அபார வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணி அரசில் பாஜகவும் இடம்பெற்றிருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் ஆளும் கூட்டணியை எதிர்த்து பாஜக களமிறங்குகிறது.

நாகாலாந்தில் முதல்வர் நெய்பியு ரியோ தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x