Last Updated : 20 Nov, 2022 06:59 AM

30  

Published : 20 Nov 2022 06:59 AM
Last Updated : 20 Nov 2022 06:59 AM

பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு: வாரணாசியில் பாரதி நினைவிட பணியையும் மேற்கொள்ள திட்டம்

பாரதியாரின் மருமகனுடன் அமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதுடெல்லி: மகாகவி பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11-ம் தேதியை தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது. வாரணாசியில் பாரதியார் தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியை நினைவகமாக மாற்றவும் மத்திய அரசு திட்டமிடுகிறது.

வாரணாசியில் தமிழர்களான பிராமணர்கள் வாழும் அக்ரஹாரப் பகுதி அனுமன் படித்துறை. இங்கு பாரதியின் அத்தைக்கு சொந்தமான ‘சிவமடம்’ என்ற பழமையான வீடு உள்ளது. இங்கு பாரதி தனது இளமைக் காலத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இதனால், அந்த வீடு, உ.பி.யில் பாரதியின் பெயரில் நினைவுகூரப்படுகிறது. இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இரு தினங்களுக்கு முன் வெளியானது.

அதில் பாரதியார் வாழ்ந்த அறையை தமிழக அரசு நினைவகமாக மாற்றி ஒரு வாரத்தில் காணொலி வாயிலாக திறக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதற்கு முன் கடந்த 2014-ல் அப்போதைய பாஜக எம்.பி. தருண் விஜய், மத்திய அரசு சார்பில் நினைவகமாக மாற்ற முயன்று முடியாமல் போனதும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் தாக்கமாக, மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் வாரணாசியில் பாரதியார் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். பாரதியாரின் தங்கை மகன் பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் கலந்துரையாடினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, “இன்று பிரதமர் முயற்சிக்கும் தேசிய ஒற்றுமையின் தேவையை அன்றே சுட்டிக் காட்டியவர் பாரதியார். தமிழரான இவர் தேசிய மகாகவிகளில் முக்கியமானவர். இதனால், இனி ஆண்டுதோறும் பாரதி பிறந்த தினமான டிசம்பர் 11-ஐ தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்க முடிவு செய்துள்ளோம். இவரது வரலாறு வருங்கால இளம் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பாரதி குடும்பத்தாரின் அனுமதி பெற்று அந்த வீட்டின் ஒரு பகுதியை நினைவகமாக மாற்ற. அரசு விரும்புகிறது” என்றார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் தன்னுடன் இருந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்திடம், பாரதி நினைவகம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசித்து திட்டம் வகுக்குமாறு கூறினார். இதன் காரணமாக, பாரதி நினைவகம் ஏற்படுத்தும் தமிழக அரசின் திட்டத்துக்கு தடை ஏற்படும் எனத் தெரிகிறது. இதற்கு உ.பி. அரசிடம் முறையான அனுமதி பெறத் தவறியதும் காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழர்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் ‘ஆசிரியர்கள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதன் பிறகு மகாகவி பாரதியின் பிறந்தநாளை ‘தேசிய மொழிகள் தினம்’ என அறிவிக்க இருப்பது தமிழர்களுக்கான பெருமையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் பாரதி தங்கையின் பேரப் பிள்ளைகளான முனைவர் ஜெயந்தி முரளி, ஹேமா, ரவி ஆகியோர் நேற்று தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x