Published : 20 Nov 2022 06:19 AM
Last Updated : 20 Nov 2022 06:19 AM

குஜராத் தேர்தலில் போட்டியிடும் தொழிலாளி டெபாசிட் தொகையை நாணயமாக வழங்கினார்

காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள சேரி காலனி, கடந்த 2010-ம் ஆண்டு இடித்து தள்ளப்பட்டு அங்கு மகாத்மா காந்திக்கு தண்டி குதிர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இங்கு வசித்த குடிசைப் பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். கடந்த 2019-ல் அங்கு ஓட்டல் கட்டுவதற்காக 521 குடிசை வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இதனால் இங்கு வசித்தவர்கள் மீண்டும் அருகில் உள்ள பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இங்கு மின்சார வசதி, குடிநீர் வசதி ஏதும் செய்து கொடுக்கப்படவில்லை.

தேர்தல் நடைபெறும்போதெல்லாம் இப்பகுதிக்கு அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் வந்து பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின் மறந்து விடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் காந்திநகர் வடக்கு தொகுதியில் தங்கள் பகுதியைச் சேர்ந்த மகேந்திர பாட்னி என்பவரை சுயேச்சை வேட்பாளராக களமிறக்கி உள்ளனர். அவர் குடிசைப் பகுதி மக்களிடம் ஒரு ரூபாய் நாணயங்களாக ரூ.10,000 வசூலித்தார். அதை தேர்தலில் போட்டியிடுவதற்கு டெபாசிட் தொகையாக செலுத்தினார்.

இது குறித்து மகேந்திர பாட்னி கூறுகையில், ‘‘எங்கள் பகுதி மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றினால், நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் வாழ்வதற்கு அரசு நிரந்தர இடம் தர வேண்டும். அப்போதுதான், இன்னொரு இடம்பெயர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x