Published : 16 Nov 2016 03:27 PM
Last Updated : 16 Nov 2016 03:27 PM

வங்கி, ஏடிஎம் இல்லை: பணமின்றி தவிக்கும் சுந்தரவன தீவு

மேற்கு வங்க மாநிலம் சுந்தரவனக்காடுகளில் உள்ள கோராமரா என்ற சிறிய தீவில் வசிக்கும் மக்கள் வங்கி, ஏடிஎம் எதுவும் இல்லாமல் பணத்துக்கு திண்டாடி வருகின்றனர்.

ரூ.500, 1000 நடவடிக்கையை நடுத்தர வர்க்கத்தினரும், என்.ஆர்.ஐ.களும், பணத்தட்டுப்பாடு இல்லாதவர்களும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் நிலையில், ஆங்காங்கே சிறு வாழ்வாதாரத்துடன் எந்த விதத்திலும் அரசுக்கு தொந்தரவு கொடுக்காமல் வாழ்ந்து வரும் பலருக்கு மத்திய அரசு கொடுத்துள்ள வாழ்வாதார சிக்கல்களை வெளி உலகிற்கு கொண்டு வர போதிய வாய்ப்பில்லாமல் போயுள்ளது.

படகோட்டி, சிறிய கடைக்கு சொந்தக்காரர், மீன் விற்பவர், குழந்தைகள் நலக்காப்பகம் நடத்திவரும் பெண் என்று அனைவரும் பணமின்றி தவித்து வருகின்றனர்.

வங்காள விரிகுடாவை ஹூக்ளி சந்திக்கும் இடத்தில் உள்ளது கோராமரா என்ற சிறியதீவு. ஏற்கெனவே புவிவெப்பமடைதல் நடவடிக்கையினால் கடல்நீர்மட்டம் அதிகரித்து இந்தத் தீவு கடலுக்குள் சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் இன்னமும் 5,000 பேர் இந்தத் தீவில் வசித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தின் வங்கி வசதி இல்லாத 700 கிராமப் பஞ்சாயத்துகளில் கோரமராவும் ஒன்று.

கோரமராவில் படகு ஓட்டி பிழைத்து வரும் கலிபட காரக் என்பவர் கூறும்போது, ‘சில நாட்களாக வாடிக்கையாளர்களே இல்லை. அப்படி வாடிக்கையாளர்கள் வந்தாலும் அவர்கள் கொடுக்கும் 10 ரூபாய் நோட்டுக்கு என்னிடம் மீதி கொடுக்க பணம் இல்லை, மஞ்சள் நிற டோக்கனைத்தான் கொடுத்து வருகிறேன். மேலும் கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்களும் அவ்வளவாக வருவதில்லை’ என்றார்.

குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வரும் ரூபி மீட்டி என்பவரை நம்பி 51 குழ்ந்தைகள் 13 கருத்தரித்த தாய்மார்களும், சில செவிலித்தாய்களும் உள்ளனர். இவர்கள் உணவுக்கு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்றார்.

“வங்கி இல்லை. குறைந்த்து ரூ.150 தேவைப்படும். ஆனால் இதற்காக நான் சாகருக்குச் (இன்னொரு தீவு) செல்ல வேண்டும். ஆனால் என்னிடம் அவ்வளவு பணமும் இல்லை” என்றார்.

இவர் இந்த மையத்தை பொதுமக்கள் ஆதரவின் பேரில்தான் நடத்தி வருகிறார், ஒருவரிடமும் பணம் இல்லாத போது காப்பகத்தை எப்படி நடத்த முடியும் என்கிறார் அவர்.

கடை வைத்திருக்கும் கனாய் லால் என்பவர் நாளொன்றுக்கு ரூ.1,500 வரை கடனுக்கு சாமான்கள் அளித்து மக்களுக்கு உதவி வருகிறார். ஆனால் கடன் மேலும் அதிகரிக்கும் என்றே அவர் கவலைப்படுகிறார்.

“கடந்த புதன் கிழமையிலிருந்து இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. என்னிடம் சில ரூ.500 நோட்டுகள் உள்ளன. ஆனால் நான் இதனை மாற்ற நம்கானாவுக்குச் செல்ல வேண்டும்” என்றார் அவர்.

இவர் கடைக்கு சற்று தள்ளி மீன் விற்றுக் கொண்டிருக்கும் அமித் காரக் என்பவர் மீன் வாங்க வாடிக்கையாளர்களே வரவில்லை என்கிறார். சங்கர் கிரி என்ற சக கிராமத்தவரை கெஞ்சி கூத்தாடி கடனுக்காவது மீன்களை வாங்கிச் செல்லுமாறு இவர் வலியுறுத்தியுள்ளார். ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம் என்று மனமிருந்தாலும் உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

சங்கர் கிரி வெற்றிலைப் பயிரிட்டு அதனை விற்று வருகிறார். 100 வெற்றிலைக்கு ரூ.300 கிடைக்கும். ஆனால் ஒருவரும் ரூ.100 கூட கொடுக்க முன்வரவில்லை என்றார் வருத்தத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x