Published : 03 Nov 2022 09:48 AM
Last Updated : 03 Nov 2022 09:48 AM

மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன்; மன்னித்து விடுங்கள் - கோயிலில் திருடிய பொருட்களை திருப்பி கொடுத்த திருடன்

திருடன் திருப்பிக் கொடுத்த பொருட்களுடன் அவரது மன்னிப்பு கடிதம்.

போபால்: மத்திய பிரதேசத்தில் பாலகாட் நகரில் உள்ள லம்டா என்ற இடத்தில் ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம் 24-ம் தேதி விலைமதிக்க முடியாத பல பொருட்கள் திருடு போயின. போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு குழியில் ஒரு பை இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். அப்பையில் கோயிலில் திருடுபோன அனைத்து பொருட்களும் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

அப்பையில் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தில், “இந்தக் குற்றத்தை செய்த பிறகு நான் நிறைய கஷ்டப்பட்டேன். அதனால் இந்தப் பொருட்களை திருப்பிக் கொடுக்கிறேன். இவற்றை திருடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதி இருந்தது. தகவல் அறிந்து வந்த போலீஸாரும் திருடனின் கடிதத்தைப் பார்த்தனர். அப்பொருட்களை கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதிவாசி கூறும்போது, “திருடுபோன பொருட்களை மறுபடியும் கண்டதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். கடவுள் நம்முடன் இருக்கிறார், அற்புதங்கள் நிகழ்த்துகிறார் என்பதையே இது காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x