Published : 19 Oct 2022 07:57 PM
Last Updated : 19 Oct 2022 07:57 PM

அடிமை மனோபாவத்தில் இருந்து நாட்டை விடுவிக்கும் முயற்சியே புதிய தேசிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி

நிகழ்வில் பிரதமர் மோடி.

“புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது அடிமை மனோபாவத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கும், திறமை மற்றும் புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிப்பதற்குமான முயற்சியாகும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத்தின் அடலாஜில் உள்ள த்ரிமந்திரில் மிகச் சிறந்த பள்ளிகள் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. த்ரிமந்திரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.4260 கோடி மதிப்புள்ள திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இம்மாநிலத்தில் புதிய வகுப்பறைகள், நவீன வசதி கொண்ட வகுப்பறைகள், கணினி சோதனைக் கூடங்கள், அடிப்படை கட்டமைப்பின் ஒட்டுமொத்த மேம்பாடு ஆகியவை கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியது. “அமிர்த காலத்திற்கான அமிர்த தலைமுறையின் உருவாக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கையை குஜராத் மேற்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கும், வளர்ச்சி அடைந்த குஜராத்திற்கும் ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது. மிகச் சிறந்த பள்ளிகள் திட்டத்திற்காக குஜராத்தில் வரவிருக்கும் தலைமுறைகளுக்கும், அனைத்து குடிமக்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நவீன வசதிகள், நவீன வகுப்பறைகள், நவீன பயிற்றுமுறைகள் அனைத்துக்கும் அப்பால் கல்வி முறையை 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடு அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். நமது இளம் பருவ மாணவர்கள் மெய்நிகர் தன்மையின் ஆற்றலையும் பள்ளிகளில் உள்ள இணைய வசதிகளையும் இப்போது உணர்வார்கள்.

மிகச் சிறந்த பள்ளிகள் இயக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த நாட்டில் முதன்மையானதாக குஜராத்தை மாற்றி இருப்பதில் மகிழ்ச்சி. இந்த வரலாற்று சாதனைக்காக முதல்வர் பூபேந்திர படேலின் அணியினருக்கு வாழ்த்துகள்.

கடந்த இரு தசாப்தங்களில் கல்வி முறையில் குஜராத் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு தசாப்தங்களில் குஜராத்தில் 1.25 லட்சத்திற்கும் அதிகமான புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத் எப்போதுமே கல்வித் துறையில் சில தனித்துவ மற்றும் பெரும் சோதனைகளின் பகுதியாக இருந்துள்ளது. ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தை நாங்கள் உருவாக்கினோம், குஜராத்தின் முதலாவது ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம் இது.

14.5 ஆயிரம் பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் தொடங்கவிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் அமலாக்கத்திற்கு பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக இருக்கும். இந்த திட்டத்திற்கு 27,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது அடிமை மனோபாவத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கும், திறமை மற்றும் புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிப்பதற்குமான முயற்சியாகும்.

அறிவுடைமையின் அளவாக ஆங்கில மொழி எடுத்துக் கொள்ளப்பட்டதால் ஊரக திறமையை வெளிப்படுத்துவதில் தடங்கலை ஏற்படுத்திவிட்டது. தற்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றை இந்திய மொழிகளிலும் படிப்பதற்கான தெரிவை மாணவர்கள் மேற்கொள்வது தொடங்கி விட்டனர். குஜராத்தி உட்பட பல இந்திய மொழிகளில் இந்த பாடங்களை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பழங்காலத்திலிருந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியமானதாக இருந்துள்ளது. இயற்கையாகவே அறிவின் ஆதரவாளராக இந்தியா இருந்துள்ளது. நமது மூதாதையர்கள் உலகின் மிகச் சிறந்த பல்கலைக் கழகங்களை கட்டி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நூலகங்களை நிறுவியுள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பெரும்பாலான கண்டுபிடிப்புகள் இந்தியாவில் இருக்கும். குஜராத் இதுவரை வர்த்தகத்திற்கும், வணிகத்திற்கும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் புதிய கண்டுபிடிப்பின் குவிமையமாக குஜராத் இருப்பதால், நாட்டின் அறிவு மையமாக அது உருவாகி வருகிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்வ்ரத் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x