Published : 08 Aug 2022 06:04 AM
Last Updated : 08 Aug 2022 06:04 AM

பழி வாங்கும் குணமுடையவர் நிதிஷ் குமார்: கட்சியில் இருந்து விலகிய சிங் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹாரில் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.சி.பி.சிங், ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் அவரது பதவி முடிந்தது. ஆனால், மறுவாய்ப்பு வழங்கவில்லை. இதன் காரணமாக மத்திய அரசில் உருக்கு துறை அமைச்சர் பதவியும் பறிபோனது.

இந்த சூழலில் கடந்த 2013 முதல் 2022 வரை சிங் மற்றும் அவரது மனைவி, 2 மகள்கள் பெயரில் அதிக சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்.சி.பி. சிங் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து விலகினார். இதுகுறித்து சிங் கூறும்போது, ‘‘எனது தந்தையின் பூர்வீக சொத்துகள் கிடைத்தன.

எனது மனைவி சொந்த ஊரில் விவசாயம் செய்கிறார். எனது மகள்கள் கவுரவமான பணியில் உள்ளனர். எங்களது வருவாயை நிலங்களில் முதலீடு செய்துள்ளோம். இதுதொடர்பான ஆவணங்களை யார் வேண்டுமானாலும் சரிபார்த்து கொள்ளலாம். பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், பழிவாங்கும் குணமுடையவர். தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார். நாட்டின் பிரதமராக வேண்டும் என்பது நிதிஷின் நீண்ட நாள் ஆசை. ஏழு பிறவிகள் எடுத்தாலும் அவர் பிரதமராக முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x