Published : 09 Feb 2022 03:09 PM
Last Updated : 09 Feb 2022 03:09 PM

நாடாளுமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்கள்: பிரதமர் மோடிக்கு கார்கே கண்டனம்

புதுடெல்லி: நீங்கள் காங்கிரஸையோ, காந்தியையோ, நேருவையோ அல்லது ராகுல் காந்தியையோ வெறுக்கிறீர்கள் என்றால், அதையெல்லாம் நாடாளுமன்றத்திற்கு வெளியே சொல்லுங்கள் என பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், ‘‘கோவிட்-19 முதல் அலையின்போது காங்கிரஸ் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது. கோவிட்-19 முதல் அலையின்போது, முழு உலகமும் மக்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது.

ஆனால், இந்த வரம்புகளையும் தாண்டி உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் மும்பையில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல காங்கிரஸ் தூண்டியது. காங்கிரஸ்தான் மக்களை கஷ்டத்தில் தள்ளியது’’ என்று பிரதமர் குற்றம்சாட்டினார். இதுபோலவே மாநிலங்களவையிலும் பதிலுரையின்போது பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் நேருவை விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியது முழுக்க முழுக்க அரசியல் உரையே. பிரதமர் மோடி பெகாசஸ், கோவிட், பணவீக்கம் போன்ற நாங்கள் சுட்டிக்காட்டிய எந்த பிரச்சினைக்கும அவர் பதிலளிக்கவில்லை.

காங்கிரஸ் போராடி சுதந்திரம் பெற்றபோது நாங்கள் பிறக்கவில்லை.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாததத்தின் பதிலுரையின்போது நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்.

நீங்கள் காங்கிரஸையோ, காந்தியையோ, நேருவையோ அல்லது ராகுல் காந்தியையோ வெறுக்கிறீர்கள் என்றால், அதையெல்லாம் நாடாளுமன்றத்திற்கு வெளியே சொல்லுங்கள். நாடளுமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x