Last Updated : 09 Feb, 2022 12:20 PM

 

Published : 09 Feb 2022 12:20 PM
Last Updated : 09 Feb 2022 12:20 PM

காதல் திருமணங்களுக்கு லவ் ஜிகாத் தடையா?- உ.பி.யின் தேர்தல் அறிக்கையில் மதமாற்ற தடைச் சட்டத்தில் 10 வருட தண்டனை என பாஜக அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ‘லவ் ஜிகாத்’ எனப்படும் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு 10 வருடமாக தண்டனையை கூட்டுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் இருவேறு மதத்தினர் செய்யும் காதல் திருமணத்திற்கு தடை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, இந்து பெண்களை குறி வைத்து மதமாற்றம் செய்யும் நோக்கில் மணமுடிக்கும் முஸ்லிம்களை குறி வைத்து இயற்றப்பட்டுள்ளது. இதை தடுக்கும் நோக்கிலான ‘லவ் ஜிகாத்’ எனும் மதமாற்ற தடைச் சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு 10 வருடம் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதை குறிப்பிட்டு தனது தேர்தல் அறிக்கையாக பாஜக உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்காக அறிவித்துள்ளது. இந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று லக்னோவின் பாஜக தலைமையகத்தில் வெளியிட்டார்.

ஆனால், இதே பாஜக தலைவரின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் 2020 இல் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசிடம் இதுபோன்ற புகார் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை எனப் பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பதிலில் உ.பி. மாநிலமும் இணைந்துள்ளது. எனவே, மதமாற்றப் புகார் உத்தரப் பிரதேசத்திலும் எழாத போது ‘லவ் ஜிகாத்’ சட்டத்திற்கான அவசியம் என்ன? என்ற கேள்வி எழுந்தது.

இதுபோல், மதமாற்றக் காதல் திருமணங்கள் உ.பி.யில் செய்வது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக, இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே இந்த திருமணம் நடைபெற்றால் அப்பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டு விடும்.

இதை தடுக்க அந்த காதலர்கள் பிரச்சனையில் காவல்துறையினர் தலையிட்டு திருமணங்களை தடுத்த வரலாறு உ.பி.யில் உண்டு. இவற்றை மீறி காதல் திருமணம் செய்பவர்கள், ரகசியமாக மறைந்து வாழும் நிலை உத்தரப் பிரதேசத்தில் உள்ளது.

இன்னும் சிலர் உ.பி.க்கு வெளியே சென்று தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதும் நிகழ்கிறது. இந்த நிலையிலும் உ.பி.யில் ஆளும் பாஜக கடந்த பிப்ரவரி 2021 இல் மதமாற்ற தடை சட்டம் அமலாக்கியது.

இந்த சட்டம் அமலான ஒரு மாதங்களில் உ.பி.யில் 14 வழக்குகள் பதிவாகின. 51 பேர் கைது செய்யப்பட்டு அதில் 49 பேர் சிறையில் தள்ளப்பட்டனர். இதில், இருவேறு மதத்தினர் மதமாற்றம் மற்றும் திருமணத்திற்காக அவர்களது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த சட்டத்தில் சிக்கியவர்கள் அளித்த ஒரு மனுவை, கடந்த வருடம் நவம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்திருந்தது. உ.பி.யின் மணமுடிக்க அல்லது மணமான 17 காதலர்களால் உ.பி. அரசை எதிர்த்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக இதில் அவர்கள், தனிப்பட்ட உரிமை, சொத்து மற்றும் பாதுகாப்பிற்கு உ.பி. அரசால் அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாகப் புகார் கூறி இருந்தனர். இதன் விசாரணையில் அந்த நீதிபதிகள் அமர்வு, உ.பி. அரசின் ஆட்சியர் அனுமதிக்கான அந்த உத்தரவை ரத்து செய்தனர்.

இதற்கான அறிவுறுத்தல், உ.பி.யின் திருமணப் பதிவாளர் அலுவலகங்களுக்கும் உயர் நீதிமன்றத்தால் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், உபியின் மதமாற்ற தடைச் சட்டத்தால் திருமண வயதை எட்டியவர்கள் தான் விரும்புபவர்கள மணமுடிக்கலாம் என்பதற்கு எதிராகவே தொடர்வதாகவே கருதப்படுகிறது.

உ.பி.யின் இந்த மதமாற்ற தடைச் சட்டத்திற்கு தான் பத்து வருடமாக தண்டனையை கூட்டும் அறிவிப்பை பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த லவ் ஜிகாத் பிரச்சனை, முதன்முறையாக உ.பி.யின் மீரட்டில் சுமார் 17 வருடங்களுக்கு முன் எழுந்தது.

இங்குள்ள பூங்காவில் இருந்த இருவேறு மதத்தின் சில ஜோடிகளை பஜ்ரங் தளத்தினர் குறி வைத்தனர். இவர்களை பஜ்ரங் தளத்தின் தொண்டர்களை தம் கைகளில் சட்டத்தை எடுத்து தடிகளால் அடித்து விரட்டினர்.

இது அப்போது பரபரப்பான செய்தியாகி பஜ்ரங்தளம் தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிறகு அடங்கி இருந்த லவ் ஜிகாத் பிரச்சனை, 2017 இல் பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் எழுந்தது.

இந்தமுறை, பஜ்ரங்தளத்துடன் பாஜகவினரும் உ.பி. முழுவதுமாக காதல் ஜோடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினர். இருவேறு மதங்களின் காதல் ஜோடிகளை பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், உ.பி. தேர்தலில் பாஜக மீண்டும் ‘லவ் ஜிகாத்’ விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இதில், லவ் ஜிகாத்திற்கான தண்டனையை கடுமையாக்கி, அபராதமும் விதிக்க முன்வந்துள்ளது.

இதற்கு கடந்த வருடம் மதமாற்றப் புகாரில் முஸ்லிம் மவுலானாக்கள் கான்பூரில் கைதானதும் ஒரு காரணம். இந்த வழக்கு, உ.பி.யின் சிறப்பு அதிரடிப் படையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஒருவேளை பாஜக ஆட்சி உ.பி.யில் மீண்டும் அமைந்து புதிய சட்டம் அமலானால் அதை தொடர நீதிமன்ற வழக்குகள் அனுமதிக்கும் எனக் கூற முடியாது. எனவே, தனது இந்துத்துவா அரசியலின் அங்கமாகவே பாஜக தேர்தலுக்காக இந்த சட்டத்தை முன்னிறுத்துவதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x