Published : 09 Aug 2021 05:28 PM
Last Updated : 09 Aug 2021 05:28 PM

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜக திட்டம்: எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க உத்தரவு

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் இந்த வாரத்தில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மாநிலங்களவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பாஜக எம்.பி.க்கள் அனைவரும் அவையில் இருக்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வருகின்றன.

இதனால் இரு அவைகளும் சரியாக நடக்கவில்லை. இதனால் கடந்த 3 வாரங்களில் 78 மணி நேரம் 30 நிமிடங்களில் 60 மணி நேரம் 28 நிமிடங்கள் வீணாகின.

ஒட்டுமொத்தமாக 17 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை செயல்பட்டது. அதில் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் மட்டுமே மசோதாக்களுக்காகச் செலவிடப்பட்டது. இதனால் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை மட்டுமே நடைபெறுகிறது. இதனால் 4 நாட்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் எளிதில் மசோதாக்கள் நிறைவேறி விடும் சூழல் உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகள் ஆதரவுடனேயே மசோதாக்கள் நிறைவேறும் சூழல் உள்ளது.

எனவே நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களும் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் மாநிலங்களவையில் இருக்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x