Published : 25 Nov 2015 09:35 AM
Last Updated : 25 Nov 2015 09:35 AM
சித்தூரில் மேயர் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா, அவரது கணவர் கட்டாரி மோகன் இருவரையும் கடந்த 17ம் தேதி மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார் நேற்று 3 பேரை கைது செய்தனர். பின்னர் கொலைக்கான காரணம் குறித்து சித்துார் எஸ்.பி ஸ்ரீநிவாஸ் கூறி யதாவது:
சித்துார் மேயர் அனுராதாவின் கணவர் கட்டாரி மோகனுக்கும் அவரது அக்கா மகன் சந்திரசேகர் என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டாகவே கல்குவாரி விவகாரத்தில் பகை நீடித்து வந்தது. தவிர மாநகராட்சி டெண்டர் விவகாரத்திலும் சந்திர சேகருக்கு எதிராக அனுராதா செயல்பட்டுள்ளார். இதனால், இருவர் மீதும் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தனது கூட்டாளிகளான வெங்கடாசலபதி (51), மஞ்சுநாத் (27), ஜெயப்பிரகாஷ் (23) மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை ஏவி இந்த கொலையை செய்துள்ளார்.
இதில் வெங்கடாசலபதி, மஞ்சுநாத், ஜெயப்பிரகாஷ் ஆகிய மூவரையும் கைது செய்துவிட்டோம். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்ற வாளிகளான சந்திரசேகர், முருகா, யோகா சசிதர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்களையும் கைது செய்வோம். இவ்வாறு சித்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்ரீநிவாஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT