Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

சீனப் பிரச்சினை குறித்து பேச மறுப்பது ஏன்?- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இந்த முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். அப்போதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்திய எல்லைக்குள் சீனா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வரும் நிலையில், சீனாவின் அத்துமீறலை இந்தியா தட்டிக் கேட்கவில்லை. சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருவது ஏன்? நாட்டை பலமிழக்கச் செய்யும் கொள்கைகளை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. சீனா என்று ஒரு வார்த்தையைக் கூட கடந்த சில மாதங்களாக பிரதமர் பேசவில்லை.

வலுவான பொருளாதாரம், வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர் சமுதாயம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் பலம் உள்ளது. தனது பெரு முதலாளி நண்பர்களுக்கு உதவாமல் நமது விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை பிரதமர் மோடி பாதுகாத்திருந்தால், எல்லை தாண்டி ஆக்கிரமிக்க சீனாவுக்கு தைரியம் இருந்திருக்காது. உள்நாட்டில் இந்தியா பலமாக இருந்தால், வெளியுறவுப் பிரச்சினைகள் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x