Published : 03 Oct 2020 08:32 PM
Last Updated : 03 Oct 2020 08:32 PM
ஹாத்தரஸில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்தரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர்.
பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஹாத்தரஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து வியாழக்கிழமை ஹாத்தரஸ் செல்ல முயன்றனர்.
ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீஸார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார்.
அதன்பின் ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களை போலீஸார் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் ஹாத்தரஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் புறப்பட்டனர். பிரியங்கா காந்தி காரை ஓட்ட, அருகே ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். மற்றொரு சிறிய பேருந்தில் சமூக விலகலைக் கடைப்பிடித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் சென்றனர்.
ராகுல், பிரியங்கா வருகையைத் தடுக்கும் பொருட்டு கவுதம் புத்தாநகர் மாவட்டத்தில் உள்ள டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உ.பி. மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் நொய்டா நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டனர்.
கவுதம் புத்தாநகர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது. எல்லைகள் சீல் வைக்கப்படவில்லை என்றாலும் வாகனங்கள் கடுமையான ஆய்வுக்குப் பின்பே அனுப்பப்பட்டன.
டெல்லி-நொய்டா நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கார், காங்கிரஸ் எம்.பி.க்களின் சிறிய பேருந்து வந்ததும் அதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
உ.பி. உள்துறை அமைச்சகம் சார்பில் விடுத்த அறிவிப்பில் 5 பேர் மட்டும் ஹாத்தரஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, இந்தத் கவலை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மற்றொரு காரில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸார் 5 பேர் ஹாத்தரஸ் நகருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றனர்.
சமூக விலகல் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் ஹாத்தரஸ் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
#WATCH: Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi Vadra arrive at the residence of the victim of #HathrasIncident. pic.twitter.com/98xDRRSfY0
— ANI UP (@ANINewsUP) October 3, 2020
மற்றவர்களை நெடுஞ்சாலையிலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். தங்களையும் அனுமதிக்க வேண்டும் என அங்கு திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் மற்ற 3 பேருடன் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றனர்.
பின்னர் ஹாத்தரஸ் சென்ற அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அவர்களது குடும்பத்தினரை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT