Published : 07 Nov 2019 01:09 PM
Last Updated : 07 Nov 2019 01:09 PM
லக்னோ
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தன.
முன்னதாக அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. இதனால் நாடுமுழுவதுமே ஒருவித இறுக்கமான சூழல் நிலவுகிறது. மக்கள் மனதில் சந்தேகமும் காணப்படுகிறது.
நாடு மற்றும் மக்களின் பொதுவான நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது.’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT