Published : 04 Jul 2015 09:30 AM
Last Updated : 04 Jul 2015 09:30 AM

மேலவைத் தேர்தல் லஞ்ச விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்யாதது ஏன்?- ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி

தெலங்கானா மாநில மேலவை தேர்தல் விவகாரத்தில் லஞ்சம் கொடுத்த வழக்கில் தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை ஏன் கைது செய்யவில்லை என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கேள்வி எழுப்பி உள்ளார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் ஏற்பட்ட சூறாவளி காற்றால் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஆறுதல் கூறினார். அப்போது, காக்கி நாடாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இதற்கு காரணம் சந்திரபாபு நாயுடுதான். வானிலை முன்னறிவிப்பை உரிய நேரத்தில் சரியாக அறிவித்திருந்தால் 9 மீனவர்கள் இறந்திருக்க மாட்டார்கள்.

தெலங்கானா மேலவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் வெற்றிபெற ரூ. 5 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. முன் பணமாக ரூ. 50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு உள்ளதாக அவர் பேசிய பேச்சுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. ஆனாலும் இதுவரை அவர் முதல்வர் என்கிற ஒரே காரணத்தினால் கைது செய்யப்படவில்லை. பேரம் பேசிய தொகையில் ரூ. 50 லட்சம் மட்டும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மீதி பணத்துக்கு தெலுங்கு தேச கட்சியினர் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x