Last Updated : 25 Jul, 2015 09:27 AM

 

Published : 25 Jul 2015 09:27 AM
Last Updated : 25 Jul 2015 09:27 AM

டெல்லியில் வீடு வீடாக செல்லும் `மெடிசின் பாபா’: பயன்படுத்தாத மருந்துகளை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கும் முதியவர்

டெல்லியில் வசதி படைத்தவர்கள் வசமுள்ள பயன்படுத்தாமல் மீதமாகியுள்ள மருந்துகளை சேகரித்து, அவற்றை ஏழைகளுக்கு வழங்கி வருகிறார் ஓம்காரநாத் என்ற முதியவர்.

79 வயது ஓம்காரநாத், ரத்த வங்கி ஒன்றில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 8 ஆண்டுகளாக இப்பணியை செய்து வருகிறார்.

‘ஹலோ நான் மெடிசின் பாபா’ என்ற வாசகங்களும் தனது தொலைபேசி எண்ணும் கொண்ட காவி நிற சட்டை அணிந்து கொள்ளும் இவர், ஒவ்வொரு வார இறுதியிலும் பயன்படுத்தாத மருந்துகளைத் தேடி புறப்படுகிறார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீடு வீடாக செல்வதன் மூலம் இவர் 7 கி.மீட்டருக்கு மேல் நடக்கிறார். சில மணி நேரங்களில் ஒரு பை நிறைய மருந்துகளை சேகரித்து விடுகிறார்.

முதலில் இவரிடம் மருந்துகளை கொடுப்பதற்கு தயக்கம் காட்டிய மக்கள், பிறகு அவரது நல்ல உள்ளம் அறிந்து கொடுக்கத் தொடங்கினர்.

தென்மேற்கு டெல்லியில் மங்களாபுரி என்ற குடிசைப் பகுதியில் வசிக்கும் ஓம்கார நாத், தனது வீட்டுக்கு அருகிலேயே அறை ஒன்றை வாடகைக்கு எடுத் துள்ளார். அங்கு இந்த மருந்து களை இருப்பு வைக்கும் அவர், டாக்டர்களின் மருந்து சீட்டுகளை கொண்டு வருவோருக்கு அவற்றை இலவசமாக வழங்கு கிறார். ஒவ்வொரு மாதமும் ரூ.5 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள மருந்துகளை இவர் வழங்குவதாக கூறுகிறார்.

வீடுகளுக்கு நேரடியாக சென்று மருந்துகளை சேகரிப்பதுடன் டெல்லியில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மருந்து பெட்டிகளும் வைத்துள்ளார். இவற்றின் மூலமும் மருந்துகளை சேகரிக்கிறார்.

இதில் சேகரமாகும் காலாவதி யாகாத மருந்துகளை மட்டுமே இவர் தன்னைத்தேடி வருபவர் களுக்கு கொடுக்கிறார்.

விபத்து ஒன்றில் இரு கால்களி லும் எலும்பு முறிவு ஏற்பட்ட ஓம்காரநாத் கைத்தடி உதவியுடன் தான் நடக்கிறார். இவரது மருந்து கிடங்கில் சாதாரண தலைவலியில் தொடங்கி, புற்றுநோய் வரை மருந்து மாத்திரைகள் வரை உள்ளன.

“டெல்லியில் ஒருமுறை கட்டுமானத் தொழிலாளர்கள் சிலர் காயம் அடைந்தனர். அவர்களுடன் நான் அரசு மருத்துமனைக்கு சென்ற போது அங்கு மருந்துகள் இல்லாத தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்படவில்லை.

மருந்துகளை வெளியில் வாங்கி வருமாறு கூறினார்கள். அப்போதுதான் எனக்கு இந்த எண்ணம் உதயமானது” என்கிறார் ஓம்காரநாத்.

“ஒவ்வொரு பங்களாவிலும் பயன்படுத்தாத மீதமான மருந்து கள் கண்டிப்பாக இருக்கும். இதை அவர்கள் குப்பையில்தான் கொட்டு வார்கள். எனவே, இவற்றை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கு கிறேன். நான் இறப்பதற்கு முன் இப்பணி மிகப்பெரிய இயக்கமாக மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்” என்கிறார்.

மருந்துகள் தவிர, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், நெபுலைசர், வீல் சேர், வாக்கர் போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கும் ஏழைகளுக்கு நிதியுதவி பெற்றுத் தருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x