Published : 04 Jul 2015 10:51 AM
Last Updated : 04 Jul 2015 10:51 AM
கார் விபத்தில் சிக்கிய நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி (66) சிகிச்சை முடிந்து இன்று (சனிக்கிழமை) வீடு திரும்பினார்.
ஹேமமாலினியின் குடும்பத்தார் வேண்டுகோளுக்கு இணங்க அவர் இன்று காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஃபோர்டிஸ் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹேமமாலினி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு தனது தொகுதியான மதுராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஆக்ரா ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் தவுசா நகருக்கு அருகில், அவரது கார் எதிரில் வந்த மற்றொரு காருடன் மோதியது.
ஜெய்ப்பூரில் இருந்து லால்சாட் நோக்கிச் சென்ற இந்த காரில் ஹனுமன் மகாஜன் என்பவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்தார். விபத்தில் இவரது 4 வயது மகள் சோனம் உயிரிழந்தார். மேலும் ஹனுமன் மகாஜன், அவரது மனைவி ஷிகா (35), சோமில் (5) சீமா (40) ஆகியோரும் நடிகை ஹேமமாலினியும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டனர்.
ஹேமமாலினியின் கார் டிரைவர் ரமேஷ் சந்த் தாக்கூரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது, அதிக வேகத்தில் கார் ஓட்டியது, பணியில் அலட்சியமாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களுக்கான பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விபத்தில் ஹேமமாலினிக்கு நெற்றியில் கண் புருவத்துக்கு அருகில் காயம் ஏற்பட்டது. மேலும் முகத்தில் சிராய்ப்புகளும் ஏற்பட் டன. ஜெய்ப்பூரில் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட ஹேமமாலினிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT