Published : 19 May 2015 08:21 AM
Last Updated : 19 May 2015 08:21 AM

கேஇஎம் மருத்துவமனை நர்ஸ்கள் எதிர்ப்பு எதிரொலியால் கருணைக் கொலைக்கு அனுமதி மறுத்த உச்ச நீதிமன்றம்

கோமாவில் இருந்த அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, கேஇஎம் மருத்துவமனை நர்ஸ்கள், அருணாவை கருணைக் கொலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

உயிருக்குப் போராடி வரும் அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளரும் அருணாவின் தோழியுமான பிங்கி விரானி, ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மார் கண்டேய கட்ஜு மற்றும் கியான்சுதா மிஸ்ரா அடங்கிய அமர்வு, அருணாவை பரிசோதனை செய்வதற்காக ஒரு குழுவை அமைக்குமாறு 2011-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி உத்தரவிட்டது.

பின்னர் அக்குழு அருணாவின் செயல்பாடுகள் அடங்கிய வீடியோ காட்சியுடன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த வீடியோ காட்சியை நீதிபதிகள் பார்த்தனர். பின்னர் அருணாவை வாழ அனு மதிப்பதா அல்லது கொல்ல அனு மதிப்பதா என்பது குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது விரானி கூறும்போது, “இப்போதுள்ள நிலையில் அருணா உயிர் வாழ்வதற்கான தகுதி இருக் கிறதா” என்று கேள்வி எழுப்பினரா்.

ஆனால், நீதிமன்றத்துக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட அப்போதைய அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஜி.இ.வாஹன்வதி கூறும்போது, “இயற்கையான மரண உரிமையுடன் மரண உரிமையை குழப்பிக் கொள்ளக்கூடாது” என்றார். இறுதியில் எந்த முடிவும் எடுக்கப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் கேஇஎம் மருத்துவமனை நர்ஸ் மற்றும் ஊழியர்களின் கருத்தை கேட்க நீதிமன்றம் முடிவு செய்தது.

இதன்படி, மருத்துவமனை ஊழியர்கள் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “மருத்துவமனையில் புதிதாக சேரும் ஊழியர்கள், மாணவர் நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவரையும் அருணாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம். அருணா நம்மில் ஒருவர் என்றும், அவர் தொடர்ந்து எங்களுடன் இருக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கூறுகின்றனர். அருணாவை ஒரு குழந்தையைப் போல கவனித்து வருகிறோம். எனவே அவரை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி கருணைக் கொலை செய்ய அனுமதிக்க முடியாது எனக்கூறி விரானியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரம் மருத்துவமனையின் நடவடிக்கையை நீதிமன்றம் வெகுவாக பாராட்டியது.

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், உயிரைப் போக்கக்கூடிய பொருட்களை கொடுத்து நோயாளியைக் கொல்ல அனுமதி மறுத்துவிட்டது. எனினும், நோயாளி உயிர் வாழ்வதற்காக வழங்கப்படும் உணவு, மருத்துவ உதவிகளை கைவிட்டு சிகிச்சையில்லா கருணைக் கொலை (passive euthanasia) செய்ய அனுமதி அளித்தது.

இந்த நடைமுறையை உயர் நீதிமன்றங்களின் கண்காணிப்பின் கீழ் சட்டமாகவே கொண்டு வரலாம் என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான கடுமையான விதிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x