Last Updated : 19 May, 2015 06:35 PM

 

Published : 19 May 2015 06:35 PM
Last Updated : 19 May 2015 06:35 PM

விமான நிலையத்தில் தன்னை தடுத்து நிறுத்திய பெண் போலீஸை பாராட்டிய மத்திய அமைச்சர்

பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் வாயில் வழியாக நுழைய முயன்ற மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவை பெண் போலீஸ் ஒருவர் தடுத்து நிறுத்தினார்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராம் கிருபால் யாதவ். இவர் பாட்னாவுக்கு வந்த மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றார்.

அப்போது வெளியேறும் வாயில் வழியாக அமைச்சர் யாதவ் நுழைய முயன்றுள்ளார். இதைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பெண் போலீஸ் அமைச்சரை தடுத்து நிறுத்தி உள்ளார். பின்னர் அவர் தனது உயர் அதிகாரியுடன் வாக்கி டாக்கியில் பேசிய பிறகு, நுழைவு வாயில் வழியாக செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி அமைச்சர் நுழைவு வாயில் வழியாக சென்றார்.

இதுகுறித்து அமைச்சர் ராம் கிருபால் யாதவ் கூறும்போது, “விமான நிலையம் சென்ற நான் அவசரத்தில் தவறுதலாக வெளியேறும் வாயில் வழியாக நுழைய முயன்றேன். பின்னர் பெண் போலீஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் நுழைவு வாயில் வழியாக சென்றேன். கடமை தவறாத அந்த பெண்ணின் செயல் பாராட்டுக்குரியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x