Published : 13 Jul 2019 08:50 AM
Last Updated : 13 Jul 2019 08:50 AM
‘‘பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இந்த ஆண்டு 4,800 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன’’ என்று மக்களவையில் நேற்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பலநலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதில் அளித்து கூறியதாவது:நடப்பு கல்வியாண்டில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு 4,800 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்காக 24,698 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 75 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
செயற்கை நுண்ணறிவுபொதுமக்கள் உடல்நலன் சார்ந்த விஷயங்களில், செயற்கை நுண்ணறிவு திறனை (ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்) பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. மக்களின் நலனைக் காக்க, பாதுகாப்பான மற்றும் சிறப்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பணிகளில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
புற்றுநோய், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் விழித்திரை பாதிப்பு போன்றவற்றை விரைவாக கண்டறிய உயிரி தொழில்நுட்பத்துறை உட்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து நிதி ஆயோக் பணியாற்றி வருகிறது. இதற்காக பல்வேறு தரவுகளை சேகரித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு, தேசிய செயற்கை நுண்ணறிவு திட்டத்தையும் நிதி ஆயோக் வெளியிட்டது.
இவ்வாறு ஹர்ஷ் வர்தன் கூறினார்.-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT