Published : 21 Aug 2017 10:06 AM
Last Updated : 21 Aug 2017 10:06 AM

டெல்லியில் இன்று நடக்கும் கூட்டத்தில் பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, அமித் ஷா ஆலோசனை

பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோர் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். அதன்பிறகு பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 2 முறை ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக.வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார். அதன்பிறகு முதல் முறையாக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்களைப் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோர் இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தக் கூட்டத்தில் பாஜக ஆளும் 13 மாநில முதல்வர்கள், 6 துணை முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் நேற்று கூறும்போது, ‘‘மத்திய அரசின் முன்னோடி திட்டங்களைச் சிறப்பாகவும் விரைந்தும் அமல்படுத்துவது குறித்தும், தற்போது நடைபெற்று வரும் நலத்திட்டப் பணிகளின் நிலை குறித்தும் பாஜக முதல்வர்களுடன் பிரதமர் மோடி, அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளனர்’’ என்றனர்.

பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள், செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் மோடி, அமித் ஷாவிடம் எடுத்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான ‘புளூ பிரின்ட்’டை பாஜக தலைவர் அமித் ஷா 2 நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். அதில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 2019-ம் ஆண்டு தேர்தலில் 350 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ப செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை அமித் ஷா கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x