Last Updated : 26 Aug, 2016 05:52 PM

 

Published : 26 Aug 2016 05:52 PM
Last Updated : 26 Aug 2016 05:52 PM

ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

ஆர்எஸ்எஸ் குறித்த கருத்துகள் தொடர்பாக ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.

மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ்தான் கொன்றது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக, ஆர்எஸ்எஸ் தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராகுல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தைச் சுட்டிக் காட்டி, “மகாத்மா காந்தியைக் கொலை செய்த குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர்களைத்தான் ராகுல் குற்றம்சாட்டினார். ஆர்எஸ்எஸ் அமைப்பை அல்ல” என்று வாதாடினார்.

இதனிடையே, நான் ஆர்எஸ்எஸ் தொடர்பாகக் கூறியவற்றில் ஒரு வார்த்தையில் கூட மாற்றமில்லை. அதில் நான் உறுதியாக நிற்கிறேன் என ராகுல் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் தகவல்தொடர்புத் துறை தலைவர் மன்மோகன் வைத்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்எஸ்எஸ் தொடர்பாக நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக இருக்கிறேன் என ராகுல் கூறியுள்ளார். எந்த வார்த்தைகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் உள்ள வார்த்தைகளா அல்லது பொதுமேடைகளில் கூறும் அப்பட்டமான பொய்களிலா” என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் பொய் பேசுவதை நிறுத்த வேண்டும். மேலும் மன்னிப்புக் கேட்க வேண்டும். ராகுலும், காங்கிரஸும் உண்மைக்கு மரியாதை அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதுடன், நானும் எனது கட்சியும் எதிர்காலத்தில் பொய் பேச மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x