Published : 11 Sep 2016 06:17 PM
Last Updated : 11 Sep 2016 06:17 PM

தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா?- காவிரி கண்காணிப்புக் குழு இன்று முடிவு- உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் அவசர மனு

காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று நடை பெறுகிறது. இதில் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதனிடையே கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தமிழகத்துக்கு தர வேண்டிய 64 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இதனை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு தொடர்ந்து 10 நாட்களுக்கு விநா டிக்கு 15,000 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டது. கூடுதலாக நீர் தேவைப்பட்டால் காவிரி கண் காணிப்பு குழுவை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி தமிழக அரசு சார்பில் காவிரி கண்காணிப்புக் குழுவில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கர்நாடக அரசு 134 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா சுமார் 13 டி.எம்.சி. நீரை திறந்துவிடும். மேட்டூர் அணை நீர்இருப்பும் கர்நாடகா திறந்துவிட உள்ள நீரும் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. எனவே காவிரியில் தற்காலிகமாக 64 டி.எம்.சி. நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரப் பட்டுள்ளது.

காவிரி கண்காணிப்புக் குழுவில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகம் கேட்கும் அளவுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. நிபுணர் குழுவை அனுப்பி இரு மாநில அணைகளின் நீர் இருப்பு, பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களின் மனுக்களை யும் ஆய்வு செய்து தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறக்க உத்தர விடுவது என்பது குறித்து முடி வெடுக்க காவிரி கண்காணிப்புக் குழு டெல்லியில் இன்று கூடுகிறது. மத்திய நீர் வளத் துறை செயலாளர் சசி சேகர் தலைமை வகிக்கிறார். தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச் சேரி மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கர்நாடக அணைகளின் நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய அந்த மாநில அரசு கோரியுள்ளது. அதற்கு வாய்ப்பில்லை. குழு அனுப்பி பார்வையிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் கூறவில்லை. எனவே அதற்கான வாய்ப்பு இல்லை.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உறுதியாக பின்பற்றும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படியே நாங்கள் செயல் படுவோம். இறுதித் தீர்ப்பின் அடிப் படையில் தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

மத்திய நீர்வளத் துறை அதிகாரி கருத்தின்படி காவிரி கண்காணிப்புக் குழுவில் தமிழகத்துக்கு சாதகமாக முடிவெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு தொடர்ந் துள்ள வழக்கு வரும் 16-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காவிரி கண்காணிப்புக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு அப்போது தெரிவிக்கப்படும். அதற்கேற்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.

இதனிடையே உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் நேற்று முன்தினம் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்கள் நடை பெறுகின்றன. இதன்காரணமாக நாளொன்றுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுகிறது. பொதுச் சொத்துகள் சேதமடைகின்றன.

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால் தமிழகத்துக்கு 10 நாட்கள் தண்ணீர் திறக்க முடியாது. அதனை 6 நாட்களாக குறைக்க வேண்டும். நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட முடியாது. அதனை 1000 கனஅடியாக குறைக்க வேண்டும். அதற்கேற்ப முந்தைய உத்தரவை திருத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரப் பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசு வழக்கறிஞர்களில் ஒருவரான ரகுபதி கூறும்போது, “எங்களது மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

கர்நாடக அமைச்சர் மறுப்பு

டெல்லியில் முகாமிட்டுள்ள கர் நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறும்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாகவே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப் பட்டது. குடிநீர் தேவைக்கே கர்நாடகாவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க இயலாது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x