Published : 23 Sep 2016 07:42 AM
Last Updated : 23 Sep 2016 07:42 AM

பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார் மாரியப்பன்

ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட வீரர்கள் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இதில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் கலந்து கொண்டு 4 பதக்கம் பெற்றனர்.

2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கம் பெற்று இந்தியா பதக்கப் பட்டியலில் 43-வது இடத்தை பிடித்தது. தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டினார்.

இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் வருண்சிங் வெண்கலம் வென்றார். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தேவேந் திரா ஜஜாரியா தங்கமும், மகளிருக்கான குண்டு எறிதலில் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். பாராலிம்பிக் நிறைவு விழாவில் மாரியப்பன் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.

இந்நிலையில், ரியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற வீரர்கள் உட்பட அனைவரும் நேற்று தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்க ளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. மத்திய அமைச்சர் விஜய் கோயல் அனைவரையும் வரவேற்றார். இதையடுத்து தமிழக வீரர் மாரியப்பன் உட்பட அனைத்து வீரர்களும், மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x