Published : 26 Jun 2019 08:12 AM
Last Updated : 26 Jun 2019 08:12 AM

கைகளை வெட்டி விடுங்கள்: ‘மர மனிதர்’ உருக்கமான வேண்டுகோள்

வங்கதேச நாட்டின் குல்னா மாவட்டத்தில் உள்ள பாய்க்காய்சா கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் பஜந்தர் (29) அவர் அப்பகுதியில் ரிக் ஷா ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இருபது வயது வரை அப்துல் பஜந்தருக்கு உடல்ரீதியாக எந்த பிரச்சினையும் கிடையாது.

திருமணத்துக்குப் பிறகு அவரது கை, கால்களில் மரக்கட்டைகளைப் போன்று பெரிய மருக்கள் உருவாகின. அவரால் அன்றாட வேலைகளைக்கூட செய்ய முடியாமல் போனது.

நாளிதழ்கள் மூலம் அப்துல் பஜந்தர் நிலை குறித்து அறிந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அவரின் மருத்துவ செலவுகளை ஏற்றார். கடந்த 2016 முதல் தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அப்துல் பஜந்தர் தொடர்ந்து 2 ஆண்டுகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். இதுவரை அவருக்கு 25-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. கை, கால்களில் மருக்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதுகுறித்து அப்துல் பஜந்தர் கூறியபோது, ‘‘என்னால் வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இரவில் தூங்க முடியவில்லை. எனது கைகளை வெட்டி விடுமாறு மருத்துவர்களிடம் மன்றாடி வருகிறேன். அப்போதாவது எனது வலி குறையும்’’ என்று தெரிவித்தார்.

அப்துல் பஜந்தரின் தாய் அமினா பீவி கூறியபோது, ‘‘எனது மகனின் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை. நரக வேதனையில் இருந்து விடுபட அவனது கைகளை வெட்டிவிடலாம்’’ என்று தெரிவித்தார்.

டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அப்துல் பஜந்தர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x