Published : 09 Mar 2018 09:36 AM
Last Updated : 09 Mar 2018 09:36 AM
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு பெற கடந்த 2007-ம் ஆண்டில் அந்நிய முதலீட்டு வாரியம் அனுமதி வழங்கியது. அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையீட்டால் வாரியம் ஒப்புதல் வழங்கியது என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக கடந்த 28-ம் தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும் ஆஜராகி வாதிட்டனர்.
இறுதியில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியபோது, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமலாக்கத் துறை அனுப்பிய அனைத்து சம்மன்கள், விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ரவீந்திர பட் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT