Published : 11 Apr 2019 05:19 PM
Last Updated : 11 Apr 2019 05:19 PM
முதல்கட்டத் தேர்தலில் நாடுமுழுவதும் மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்தும் அலை வீசுவதை உணர முடிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 18 மாநிலங்களில், 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்றது.இந்தநிலையில், அசாம் மாநிலம் சில்சாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடந்து முடிந்துள்ளது. நாட்டில் சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இந்த முதல்கட்டத் தேர்தலில் மக்களின் ஆதரவை என்னால் உணர முடிகிறது. மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்து ஆதரவு அலை வீசுவதை முதல்கட்ட தேர்தல் நமக்கு உணர்த்துகின்றன. இந்த அலை தொடரும். எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அசாமில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள 5 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இனி எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT