Published : 29 Mar 2019 05:36 AM
Last Updated : 29 Mar 2019 05:36 AM

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் 3 தொகுதி இடைத்தேர்தலை அவசரமாக நடத்த உத்தரவிட முடியாது: திமுக வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம் 

தமிழகத்தில் காலியாக உள்ள திருப் பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப் பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அவசரகதியில் நடத்த உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி களுக்கும், காலியாக உள்ள 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்ததை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது.

இந்த 3 தொகுதிகளுக்கும் மற்ற தொகுதிகளுடன் சேர்த்து ஏப்ரல் 18-ம் தேதியே தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்பி மற்றும் முன் னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு ஏற்கெனவே கடந்த மார்ச் 15-ல் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப் போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘‘இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தக்கூடாது என யாருமே வழக்கு தொடரவில்லை. உயர் நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. தேர்தல் வெற்றியை எதிர்த்துதான் வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவதற்குள் இந்த 3 தொகுதிகளுக்கும் மற்ற தொகுதி களுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரிக்கை விடுத்திருந்தார். அதையடுத்து, நீதி பதிகள் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்து இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘திருப்பரங் குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்த தால்தான் தேர்தல் தேதி அறிவிக்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அவசர கதியில் இந்த தொகுதிகளுக்கு தேர்தலை உடனடியாக நடத்த முடியாது. ஒரு தொகுதிக்கு தேர்தலை அறி விக்கும் முன் குறைந்தபட்ச கால அவகாசம் ஆணையத்துக்கு தேவை. இப்போதுள்ள சூழலில் இந்த 3 தொகுதிகளுக்கான தேர்தலை உடனடி யாக நடத்த முடியாது. அதற்கு போது மான காலஅவகாசம் வேண்டும்’’ என்றார்.

திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இந்த 3 தொகுதிகளில் தற்போது திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதி வேட்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டன. அரவக்குறிச்சி வழக்கும் தேர்தலுக்கு எதிராக இல்லை. எனவே, ஏப்ரல் 18 அன்று இத்தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தாவிட்டாலும், அதன்பிறகாவது மற்ற மாநிலங்களில் நடக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘ஒரு தொகுதிக்கான தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என நீதிமன்றம் வரையறை செய்ய முடியாது. தேர்தலை நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் வேலை’’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x