Published : 21 Dec 2018 01:21 PM
Last Updated : 21 Dec 2018 01:21 PM
போலி என்கவுன்ட்டர் வழக்கு என்று அழைக்கப்படும் சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கவுசர் பி, நண்பர் துளசி பிரஜாபதி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 போலீஸார் உள்பட 22 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
குஜராத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மோடி முதல்வராகவும், அமித் ஷா உள்துறை அமைச்சராகவும் இருந்து போது இந்தப் என்கவுண்ட்டர் நடந்தது.
கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கவுசர் பி ஆகியோர் மோடியைக் கொலை செய்யதிட்டமிட்டதாக குஜராத் போலீஸார் சந்தேகத்தினர். இதையடுத்து, ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவில் சாங்லி நகருக்கு சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கவுசர் பி பஸ்ஸில் சென்ற போது குஜராத் போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
சொராபுதீன் கைது செய்யப்பட்ட 4 நாட்களில் அகமதாபாத் அருகே போலீஸாரல் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி கவுசர் பி தலைமறைவான நிலையில், அடுத்த 4 நாட்களுக்குப்பின் நவம்பர் 29-ம்தேதி கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இவர்களின் நண்பரான துளசிராம் பிரஜாபதி, கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி குஜராத் ராஜஸ்தான் எல்லையில் சாப்ரி எனுமிடத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சொராபுதீன், அவரின் மனைவி கவுசர்பி, பிரஜாபதி ஆகிய 3 பேரும் போலி என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று புகார் கூறப்பட்டு சொராபுதீன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கடந்த 2010-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த சிபிஐ அப்போது குஜராத் அமைச்சராக இருந்த அமித் ஷா உள்ளிட்ட 38 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2010, ஜூலை 25-ம்தேதி அமித் ஷா சிபிஐயால் கைது செய்யப்பட்டு, இரு மாதங்களுக்குப் பின் ஜாமினில் வெளியே வந்தார்.
குஜராத்தில் இந்த வழக்கு நடந்தால் நியாயமாக நடக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து, இந்த வழக்கு குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரிவிட்டது.
வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த 2014-ம் ஆண்டு அமித் ஷா உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என விடுவித்து, மீதமுள்ள 22 பேருக்கு எதிராக மட்டும் வழக்கை நடத்தியது.
இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு 210 சாட்சிகள், 92 பிறழ்சாட்சிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி முடித்தார் நீதிபதி சர்மா. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த 5-ம்தேதி தீர்ப்பை வைத்த நீதிபதி, 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், நீதிபதி ஜே.எஸ். சர்மா இன்று அளித்த தீர்ப்பில், “ குற்றம்சாட்டப்பட்ட 22 பேருக்கு எதிராக எந்தவிதமான வலுவான ஆதாரங்களையும் நிருபிக்க சிபிஐ தரப்பு தவறிவிட்டது என்பதால், அனைவரையும் விடுவிக்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT