Published : 10 Oct 2018 08:32 AM
Last Updated : 10 Oct 2018 08:32 AM

தெலங்கானாவில் தேர்வு எழுத சென்ற தாய்: 6 மாத குழந்தையை பார்த்துக்கொண்ட போலீஸார்

தெலங்கானாவில் கடந்த 7-ம் தேதி தெலங்கானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஹைதராபாத் தில் உள்ள பார்ஸி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பலர் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதில் ஒரு பெண், தனது 6 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்தார். தேர்வு தொடங்கியதும், தனது குழந்தையை, தன்னுடன் வந்த தன் தங்கையிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார். ஆனால், அந்த குழந்தை தாயை பிரிந்ததாலும், பசியாலும் அழத்தொடங்கியது. குழந்தையின் சித்தி எவ்வளவோ சமாளித்தும் பயன் இல்லை. இதனைப் பார்த்த அங்கிருந்த 4 பாதுகாப்பு போலீ ஸார், அந்த குழந்தையை சமா தானப்படுத்தினர்.

பின்னர், டீக்கடையில் இருந்து பால் வாங்கி பாட்டிலில் ஊற்றி கொடுத்தனர். இதனால், அக்குழந் தையின் அழுகை நின்றது. இதேபோன்று அக்குழந்தையை 2 மணி நேரம் வரை அழாத வகையில் பாதுகாத்து, தேர்வு எழுதிவிட்டு வந்த தாயிடம் ஒப்படைத்தனர்.

இதனை பார்த்த பொதுமக்கள், போலீஸாரின் பொறுப்பை வெகு வாக பாராட்டினர். இதேபோன்று, கடந்த 1-ம் தேதி நடந்த அரசுப்பணி தேர்வில், தெலங்கானா மாநிலம், மகபூப்நகரில் முஜீப் எனும் போலீஸ்காரர், தேர்வு எழுத சென்ற தாயின் 4 மாத குழந்தையை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x