Last Updated : 11 Oct, 2018 10:01 PM

 

Published : 11 Oct 2018 10:01 PM
Last Updated : 11 Oct 2018 10:01 PM

வலுக்கும் #மீ டூ பிரச்சாரம்; மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மவுனம் கலைக்க வேண்டும்: ஸ்மிருதி இராணி வலியுறுத்தல்

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து அவர் மவுனம் கலைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி மற்றும் மற்றொரு பத்திரிகையாளரும் புகார் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஏறக்குறைய 40 ஆண்டு கால பத்திரிகை அனுபவம் கொண்டவர். பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் இந்த இரு பெண் பத்திரிகையாளர்களிடம் தவறாக நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் எம்.ஜே அக்பருக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கையில் எடுத்து அக்பர் பதவி விலக வேண்டும் அல்லது விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எம்.ஜே.அக்பர் விளக்கம் அளிக்கக் கோரியுள்ளன.

ஆனால், மத்தியஅமைச்சர் அக்பர் மீதான குற்றச்சாட்டு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதுவரை வாய் திறக்கவில்லை. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

தற்போது வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருக்கும் மத்தியஅமைச்சர் அக்பர் இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

இந்நிலையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மும்பையில் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மத்திய அமைச்சர் அக்பர் மீதான பாலியல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ''இந்த விவகாரத்தில் அமைச்சர் அக்பர் பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆதலால், நான் இதில் கருத்து கூற இயலாது. ஏனென்றால், சம்பவம் நடந்த போது நான் இல்லை. அதேசமயம் புகார் அளிக்கும் பெண்களையும் எடைபோட்டு விடாதீர்கள். அவர்கள் பல விஷயங்களைக் கடந்து இவ்வாறு பேசுகிறார்கள்'' என ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x