Last Updated : 19 Jul, 2018 06:42 PM

 

Published : 19 Jul 2018 06:42 PM
Last Updated : 19 Jul 2018 06:42 PM

சோனியாவின் கணக்கு தவறானது: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கருத்து

 

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போடும் கணக்கு தவறானது என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் கூறியுள்ளார். இது குறித்து நேற்று சோனியா, 'எங்களிடம் எண்ணிக்கை இல்லை என யார் சொன்னது?'' என எதிர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இது குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அனந்த குமார் கூறும்போது, ''சோனியாவின் கணக்கு தவறானது. இதேபோல் கடந்த 1996-ல் அவர்கள் தவறாகக் கணக்கிட்டு ஏற்பட்ட நிலை எங்களுக்கும் தெரியும். மோடி அரசுக்கு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் முழு ஆதரவு உள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக தேசிய ஜனநாயக முன்னணியுடன் சேர்த்து மற்ற கட்சிகளும் கூட வாக்களிக்கும்'' எனத் தெரிவித்தார்.

1996-ல் போடப்பட்ட கணக்கு

கடந்த 1996-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என சோனியா காந்தி நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், பாஜக முதன்முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து சோனியாவின் நம்பிக்கையைத் தகர்த்தது. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா பிரதமராகப் பதவி ஏற்றதை காங்கிரஸ் போட்ட கணக்கு தவறு என அனந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மற்ற கட்சிகள் எவை?

மக்களவையின் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சிகளிடம் உறுப்பினர்கள் அதிமுக 37, பிஜு ஜனதா தளம் 20, தெலுங்கு ராஷ்டிரிய சமிதி 11 உள்ளனர். இவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் எனக் கருதப்படுகிறது. இதை மனதில் வைத்து மத்திய அமைச்சர் அனந்த குமார், மற்ற கட்சிகளும் தமக்கு ஆதரவளிக்க இருப்பதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x