Last Updated : 19 Jul, 2018 05:46 PM

 

Published : 19 Jul 2018 05:46 PM
Last Updated : 19 Jul 2018 05:46 PM

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்ப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்ய மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், ரூ.600 கோடி முதலீட்டு வரை மட்டுமே மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளிக்கும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கும். ஆனால், விதிமுறைகளை மீறி அனுமதி வாங்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் அனுமதி பெற்றுக்கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக பணம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கப்பிரிவும், ஏர்செல் மேக்சிஸ் முறைகேடாக ஒப்பந்தம் வழIங்கிய பிரதான வழக்கை சிபிஐயும் விசாரணை நடத்தி வந்தன.

இதில் ஏர்செல்மேக்சிஸ் பிரதான வழக்கில் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓபி சைனி முன்னிலையில், இன்று சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x