Last Updated : 19 Jul, 2018 07:28 PM

 

Published : 19 Jul 2018 07:28 PM
Last Updated : 19 Jul 2018 07:28 PM

சிபிஐக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்- மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

 ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் எனக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி சிபிஐக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. இதை நீதிமன்றத்தில் தீவிரமாக எதிர்ப்பேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்ய மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், ரூ.600 கோடி முதலீடு வரை மட்டுமே மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளிக்கும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கும். ஆனால், விதிமுறைகளை மீறி அனுமதி வாங்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் அனுமதி பெற்றுக்கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அந்த நிறுவனத்துக்குச் சட்டவிரோதமாக பணம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கப் பிரிவும், ஏர்செல் மேக்சிஸ் முறைகேடாக ஒப்பந்தம் வழIங்கிய பிரதான வழக்கை சிபிஐயும் விசாரணை நடத்தி வந்தன.

இதில் ஏர்செல் மேக்சிஸ் பிரதான வழக்கில் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓபி சைனி முன்னிலையில், இன்று சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், “எனக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி சிபிஐக்கு அழுத்தம் கொடுத்துள்ளது மத்திய அரசு. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் என்னுடைய மதிப்பு பங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. என் மீது சிபிஐ அதிகாரிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முட்டாள்தனமானது, நகைப்புக்குரியது. இந்த வழக்கை நான் நீதிமன்றத்தில் தீவிரமாக எதிர்ப்பேன். இது தொடர்பாக இனிமேல் அதிகமான அளவில் மக்களிடம் கருத்துகளைத் தெரிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x