Published : 05 Jul 2018 04:09 PM
Last Updated : 05 Jul 2018 04:09 PM
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனும், கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா, பெங்களூருவில் இரவு தங்க மறுத்து தினந்தோறும் 350 கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊரில் இருந்து தலைமைச்செயலகம் வந்து செல்கிறார். ஜோதிடரின் அறிவுரையால் அவர் இதனை பின்பற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவகவுடாவும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த தெய்வ நம்பிக்கையும், ஜோதிட நம்பிக்கையும் கொண்டவர்கள். கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த தேர்தலை தொடர்ந்து ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தேவகவுடாவின் இரண்டாவது மகனும் முதல்வருமான குமாரசாமி ஸ்ரீரங்கம் உட்பட பல கோயில்களுக்கும் சென்று வழிபட்டார்.
அதுபோலேவே குமாரசாமி அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் தேவகவுடாவின் மூத்த மகனும், குமாரசாமியின் அண்ணனுமான ரேவண்ணாவும் பல கோயில்களுக்கு சென்று வழிபட்டார்.
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ரேவண்ணா அதன்படி மட்டுமே நடக்கும் பழக்கம் கொண்டவர். கர்நாடக அரசுக்கு இருக்கும் ஆபத்து முழுமையாக நீங்கவும், ரேவண்ணா தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிக்கவும் அவரது ஜோதிடர் சில அறிவுரைகளை கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்படி சொந்த வீட்டிலேயே அவர் தூங்க வேண்டும் என்றும் பெங்களூரில் இரவு தங்கக் கூடாது என்றும் ஆலோனை கூறியுள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாம் கூறும்போது அரசு பெங்களூரு பங்களாவில் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் அங்கு தங்க வேண்டும் எனவும் ஜோதிடர் கூறியுள்ளதாக தெரிகிறது. ஜோதிடர் சொன்னதை ஏற்றுக்கொண்ட ரேவண்ணா அதன்படி செய்து வருகிறார். ரேவண்ணாவுக்கு பெங்களூரில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் அங்கு தங்கவில்லை.
மாறாக பெங்களூருவில் இருந்து 170 கி.மீ. தொலைவிற்கும் அதிகமான தூரம் கொண்ட, தனது சொந்த ஊரான ஹசன் மாவட்டம், நரசிபுராவில் தான் வசித்து வருகிறார். அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னரும் பெங்களூருக்கு வரவில்லை. பெங்களூரில் எந்த ஹோட்டல்களிலும் அவர் தங்குவதில்லை.
அமைச்சர் என்பதால் தினந்தோறும் தலைநகரான பெங்களூருக்கு வந்து அரசு தலைமைச் செயலகம் வர வேண்டிய கட்டாயம் உள்ளது. எனினும் ஜோதிடர் கூறியபடியே, சொந்த ஊரில் இருந்து தினமும் காரில் பெங்களூரு சென்று வருகிறார். போகவும், வரவும் மொத்தம் 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
ரேவண்ணா காலை 4 மணிக்கு எழுந்து அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு வெகு சீக்கிரமாக கிளம்புகிறார். சுமார் 3 மணிநேரம் பயணம் செய்து பெங்களூரு வந்து பணிகளை கவனிக்கிறார். மீண்டும் மாலை கிளம்பினால் அவர் வீடு சென்றடைய இரவு 11.00 மணி ஆகிறது. இந்த பயணத்தால் பெரும் களைப்பு ஏற்பட்டாலும் ஜோதிடரின் கருத்தை கேட்டே அவர் இவ்வாறு பயணம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதனை ரேவண்ணா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் பெங்களூரில் தங்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். விரைவில் பெங்களூரில் அரசு பங்களாவில் தங்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT