Published : 04 Jun 2018 06:50 AM
Last Updated : 04 Jun 2018 06:50 AM
காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தில் உள்ளூர் இளைஞர்களை சேர்க்கும் முயற்சி அதிகரிக்கும் என்று பாதுகாப்புத் துறை ஏஜென்சிகள் எச்சரித்துள்ளன.
ரம்ஜான் நோன்பை முன்னிட்டு காஷ்மீரில் தற்காலிகமாக ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பாதுகாப்புத் துறை ஏஜென்சிகளைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
ஐஎஸ்எஸ்-காஷ்மீர், அன்சார் கஸ்வத்-உல்-இந்த் (அல் காய்தா ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கம்) போன்ற தீவிரவாத இயக்கங்களில் உள்ளூர் இளைஞர்களை சேர்க்கும் முயற்சி அதிகரித்துள்ளது. இதுவரை இந்த இயக்கங்களில் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் 20 இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்துள்ளனர்.
இதில் கந்தர்பால் பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக்கில் 4-வது செமஸ்டர் படிக்கும் ரவுப் என்ற இளைஞரும் அடங்குவார். மேலும் ஐபிஎஸ் அதிகாரி இனாமுல்லா மெக்னூவின் சகோதரர் யுனானி டாக்டரும் காணாமல் போயுள்ளார். இவர் தவிர 16 பேர் காணவில்லை.
ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் ஊடுருவலும் காஷ்மீரில் அதிகரித்துள்ளது. தீவிரவாதிகள் சிலர் ஜம்முவின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் ஊடுருவி உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் நடந்திருப்பதால் ராணுவ வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 பிஎஸ்எப் வீரர்கள் பலி
எல்லையில் கடந்த 2013-ம்ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நேற்று அதிகாலை 1.15 மணிக்கு காஷ்மீர் சர்வதேச எல்லை அக்னூரில் உள்ள பிரக்வால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிக் குண்டுகளை வீசியும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர்.
இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் எஸ்.என்.யாதவ் (48), கான்ஸ்டபிள் வி.கே.பாண்டே ஆகியோர் குண்டடிப் பட்டு இறந்தனர். மேலும், கனாசக், கவுர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் போலீஸ்காரர், பெண் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு பிஎஸ்எப் வீரர்கள் திருப்பி பதிலடி கொடுத்து வருகின்றனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT