Published : 08 Jun 2018 04:47 PM
Last Updated : 08 Jun 2018 04:47 PM

‘மீண்டும் ராஜீவ் கொலை போல்...?’ - பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி - பரபரப்பு கடிதம் வெளியானது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல, தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியுள்ளதாக மகாராஷ்டிர போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் பீமா - கோரேகானில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மும்பை, நாக்பூர், டெல்லியில் சிலரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாவோயிஸ்ட்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ரேனா ஜேக்கப் என்பரும் ஒருவர். அவரிடம் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

பிரதமர் மோடியை பொது நிகழ்ச்சி அல்லது பிரச்சாரக் கூட்டத்தில் வைத்த கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியுள்ளது அந்த கடிதத்தில் தெரிய வந்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை போலவே இந்த கொலையை அரங்கேற்றவும் அவர்கள் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை புனே போலீஸார் இன்று தெரிவித்தனர்.

அந்த கடிதத்தில் ‘‘தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மேற்கவங்கம், திரிபுரா என பல மாநிலங்களில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கட்சி அமைப்புகளை விரிவு படுத்தி வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால் நமது அமைப்புக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். ஏற்கெனவே நமது அமைப்புகளின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே மோடிக்கு முடிவு கட்ட வேண்டும். எனவே ராஜீவ் காந்தி மாதிரி சம்பவத்திற்கு திட்டமிடுகிறோம். தற்கொலைப்படை தாக்குதலுக்கான நேரத்திற்காக காத்திருக்கிறோம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடிதத்தை மத்திய உளவுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்கவும், பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x