Published : 24 May 2018 08:38 AM
Last Updated : 24 May 2018 08:38 AM
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் சார்பாக குமாரசாமி நேற்று முதல்வராக பொறுப்பேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் பெங்களூருவில் உள்ள காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற ஷோபா கரந்தாலஜே எம்பி, முன்னாள் துணை முதல்வர் அசோக் உள்ளிட்ட தலைவர்கள் கறுப்பு பட்டையை கைகளில் கட்டியிருந்தனர்.
இந்த போராட்டத்தின்போது மஜத தேசிய தலைவர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வராக பொறுப்பேற்ற குமாரசாமி, துணை முதல்வராக பொறுப்பேற்ற பரமேஷ்வர் உள்ளிட்டோருக்கு எதிராக பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். எடியூரப்பா பேசுகையில், “கர்நாடகாவில் கடந்த தேர்தலில் 122 இடங்களை வென்ற காங்கிரஸ் தற்போது 78 இடங்களை மட்டுமே பிடித்திருக்கிறது. மஜத 40-லிருந்து 38-ஆக குறைந்து விட்டது.மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸும், மஜதவும் பாவ கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணி நீடிக்காது. சில மாதங்களில் நான் முதல்வராக பொறுப்பேற்பேன்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT