Published : 21 May 2018 08:32 AM
Last Updated : 21 May 2018 08:32 AM

கதுவா வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி வெறும் காலுடன் 5 மணி நேரம் நடந்த முன்னாள் அமைச்சர்

காஷ்மீரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்தில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செருப்பு அணியாமல் வெறும் காலுடன் 5 மணி நேரம் நடந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சில மாதங்களுக்கு முன் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்றும் மாநில அரசு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க மாநில அரசை வலியுறுத்தி கதுவா மாவட்டத்தில் நேற்று ஊர்வலம் நடந்தது.

இதில் முதல்வர் மெகபூபா முப்தி அரசில் அமைச்சராக இருந்த பாஜகவைச் சேர்ந்த சவுத்ரி லால் சிங் கலந்து கொண்டு செருப்பு அணியாமல் 5 மணி நேரம் வெறும் காலுடன் நடந்தார். இதனால் அவரது பாதங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை வாகனத்தில் செல்லுமாறு பாஜகவினர் கேட்டுக் கொண்டனர்.

சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று கூறி அவர்களுக்கு ஆதரவாக ஏற்கெனவே நடந்த ஊர்வலத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து சர்ச்சை ஏற்பட்டதால் இருவரும் கடந்த மாதம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x