Published : 11 May 2018 02:22 PM
Last Updated : 11 May 2018 02:22 PM
ஆந்திராவின் கோதாவரி நதியில் 120 பயணிகளுடன் சென்ற படகில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில், அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான பாப்பிக்கொண்டா மலைப்பகுதியை காண, இன்று (வெள்ளிக்கிழமை) 120 பயணிகள் ஒரு சொகுசு படகில் சென்றனர். அப்போது அப்படகு வீரவப்பு லங்கா எனும் இடத்தில் சென்ற போது திடீரென படகில் உள்ள இன்ஜின் பகுதியில் தீ பிடித்தது. மேலும் தீ வேகமாக பரவியது.
இதனால் கோதாவரி நதியில் பயங்கரமாக புகை சூழ்ந்தது. இதைக் கண்ட சுற்றுலா படகு துறையினர் உடனடியாக சிறிய படகுகளை கொண்டு சென்று 120 பயணிகளையும் காப்பாற்ற முயற்சித்தனர்.
இதனிடையே, தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் ஆகியோர் சுற்றுலா படகு துறையினருடன் இணைந்து பயணிகள் அனைவரையும் காப்பாற்றினர். பயணிகளுக்கு தீ விபத்தின் போது ஏற்பட்ட புகையால் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் இந்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என தெரிய வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT