Last Updated : 22 Apr, 2018 09:09 AM

 

Published : 22 Apr 2018 09:09 AM
Last Updated : 22 Apr 2018 09:09 AM

உ.பி.யில் 17 ஓபிசி சமூகத்தினரை எஸ்சி பட்டியலில் சேர்க்க முயற்சி: அகிலேஷ் - மாயாவதி கூட்டணியை சமாளிக்க பாஜக வியூகம்

உத்தரபிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் (ஓபிசி) உள்ள 17 சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) பட்டியலில் சேர்க்க அம்மாநில பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இது, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ளும் பாஜகவின் புதிய வியூகமாகக் கருதப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனால், அம்மாநிலத்தின் மற்ற இருமுக்கிய கட்சிகளான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்து போட்டியிடும் எண்ணத்தில் உள்ளன. இதற்கு முன்னோட்டமாக, கடந்த மாதம் அம்மாநிலத்தில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில், பகுஜன் சமாஜ் ஆதரவுடன் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி, இரண்டு தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

எனவே, புதிதாக அமைந்துள்ள சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை சமாளிக்க பாஜக ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளது. அதன்படி, இதர பிற்படுத்தப்பட்டவர்களில் பட்டியலில் உள்ள 17 சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அரசு உத்தரபிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்கப்படும்பட்சத்தில், உத்தரபிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த முயற்சியை சமாஜ்வாதி கட்சி, தான் ஆட்சியில் இருந்தபோது எடுத்தது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இத்திட்டம் நிறைவேறினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு குறைந்துவிடும் என அவர் கூறி வந்தார்.

பாஜக அரசின் இத்திட்டத்தால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது. மேலும், பாஜகவுக்கு இதன் மூலம் முழுமையான அரசியல் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனிடையே, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தற்போதைய ஓபிசி சமூகங்களான கஹார், காஷ்யாப், கேவாத், நிஷாத், பிந்த், பதாம் உள்ளிட்ட 17 சமூகங்களை இணைக்க பாஜக முயன்று வருகிறது. இந்தக் கோரிக்கையானது, மேற்குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களால் 14 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகின்றன. எனவே, தற்போது, உத்தரபிரதேச அரசின் இந்தக் கோரிக்கையை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொள்ளும் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x