Published : 05 Apr 2018 01:48 PM
Last Updated : 05 Apr 2018 01:48 PM
நாடாளுமன்றம் 23 நாட்கள் முடங்கியதால் பாஜக எம்.பிக்கள் அதற்குரிய சம்பளத்தை பெறக்கூடாது என மத்திய அமைச்சர் அனந்தகுமார் கூறிய நிலையில், இதை ஏற்க முடியாது, என் சம்பளத்தை விட்டுத்தர மாட்டேன் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. தெலுங்கானாவுக்கு சிறப்பு நீதி கோரி தெலுங்குதேசம் மற்றும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் போராடி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது. எதிர்கட்சிகளுடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால், நாடாளுமன்றம் பணி ஏதும் நடைபெறாமல் கடந்த 23 நாட்களாக முடங்கியதால் எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்த நாட்களுக்குரிய சம்பளத்தை ஆளும் கட்சி எம்.பிக்கள் வாங்கப்போவதில்லை என பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சருமான அனந்தகுமார் நேற்று அறிவித்தார்.
ஆனால் இதை ஏற்க முடியாது என பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘கடந்த 23 நாட்களாகவே நான் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு சென்று வருகிறேன். எனது சுற்று வரும்போது உரிய கேள்வியையும் கேட்டுள்ளேன். கடந்த 23 நாட்களாக எனது பணிகளை தொய்வின்றி செய்து வந்துள்ளேன். மேலும், நான் பாஜகவின் அதிகாரபூர்வ எம்.பி அல்ல.
மாறாக குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட எம்.பி. எனவே பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் 23 நாட்களுக்கான சம்பளத்தை வாங்கப்போவதில்லை என்ற முடிவை நான் ஏற்கவில்லை. என் சம்பளத்தை விட்டுத்தர மாட்டேன். எனக்குரிய சம்பளத்தை கட்டாயம் பெற்றுக் கொள்வேன்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT