Published : 05 Apr 2018 08:48 AM
Last Updated : 05 Apr 2018 08:48 AM

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை: ஆதரவு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பொதுத் தேர்தலின்போது ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இப்போதுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, மக்களவை மற்றும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளர் 2 தொகுதியில் போட்டியிட முடியும். முதல்வர், பிரதமர் பதவிகளுக்கான முக்கிய வேட்பாளர்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிடுவோர், ஒருவேளை 2 தொகுதியிலும் வெற்றி பெற்றால், ஏதாவது ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும் பாஜக மூத்த தலைவருமான அஷ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலின் போது ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே 2 முறை பரிந்துரை வழங்கி உள்ளோம். இதற்கு சட்ட ஆணையமும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான 255-வது அறிக்கையில் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஒருவேளை 2 தொகுதியில் போட்டியிடுவதை தடை விதிக்க விரும்பவில்லை என்றால், இரண்டிலும் வெற்றி பெற்ற வேட்பாளர், ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும்போது, அங்கு இடைத் தேர்தல் நடத்துவதற்கான செலவை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும்’’ என்று கோரினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x