Published : 07 May 2024 06:32 AM
Last Updated : 07 May 2024 06:32 AM

ஹரியாணாவின் சைபர் மோசடி நபரிடம் 19 கிலோ தங்கம் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: வெளிநாடுகளில் உள்ள ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இந்தியர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றன. இதை தடுப்பதற்கான நடவடிக்கையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஹரியா ணாவைச் சேர்ந்த புனித் குமார், அவரது நண்பர்கள் ஆசிஸ் கக்கர், கேசவ் சூத், சிவ் தர்கர் ஆகியோர் சைபர் குற்றங்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை ஹவாலா முறையில் மாற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

ஆசிஸ் கக்கருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்தாண்டு நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள், வெளிநாட்டு வங்கி பரிவர்த்தனை விவரங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தது.

இந்த சைபர் மோசடி கும்பல் உள்நாட்டு நிறுவனங்களை நடத்துவதற்கு 188 வங்கிகணக்குகளையும், வெளிநாட்டு நிறுவனங்களை நடத்துவதற்கு 110 வங்கி கணக்குகளையும் வைத்துள்ளனர். இவர்களின் வெளிநாட்டு நிறுவனங்களில் 46 சீனாவிலும், 30 சிங்கப்பூரிலும், 18 ஹாங்காங்கிலும் உள்ளன.

ரொக்கம், சொகுசு கார்..: புனித் குமாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 8 கிலோ தங்க கட்டிகள், ரூ.75 லட்சம் ரொக்கம், நகைகள், மெர்சிடஸ், ஆடி உட்பட பல சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி அன்று புனித் குமார், வெளிநாட்டில் இருந்து டெல்லிவருவதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.அவரை விமான நிலையத்தில்கைது செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் உள்ள இந்தியன் வங்கியில் புனித் குமார் தனது தாய்பெயரில் வைத்திருந்த லாக்கரில் 19.5 கிலோ தங்கம் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.14.04கோடி. இதை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. சைபர் மோசடியில் சம்பாதித்த பணத்தை எல்லாம் தங்கமாக சேமித்து வைத்துள்ளார் புனித் குமார். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட புனித்குமாரை, மேல் விசாரணைக்காக அமலாக்கத்துறை 12 நாள்காவலில் எடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x