Published : 06 May 2024 06:45 AM
Last Updated : 06 May 2024 06:45 AM

இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை: ஆந்திர பிரச்சாரத்தில் அமைச்சர் அமித் ஷா விமர்சனம்

அமித் ஷா

தர்மாவரம்: ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம், தர்மாவரத்தில் நேற்று ஒரே மேடையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். இதில், அமித் ஷா பேசியதாவது:

ஆந்திராவில் ரவுடியிஸத்தை ஒழிக்கவே பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஊழல், முறைகேடுகளில் புரளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசை ஒடுக்கவே நாங்கள் களம் இறங்கினோம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புனிதத்தை நாங்கள் காப்பாற்றுவோம். பாஜக இருக்கும் வரை தெலுங்கு மொழியை காப்பாற்றுவோம். ஆந்திர மாநிலத்திற்கு ஜீவநாடியாக உள்ள போலவரம் அணை, ஆந்திராவில் முதல்வராக சந்திரபாபுவும், மத்தியில் பிரதமராக மோடியும் வந்தால், வெறும் 2 ஆண்டுகளில் கட்டப்படும்.

நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற மோடியை நாம் பிரதமர் ஆக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை சந்திரபாபு அனைத்து துறையிலும் சிறந்து விளங்கச் செய்தார். மாநில பிரிவினை நடந்த பிறகும் கூட ஆந்திராவை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். இவர் செய்த வளர்ச்சிப் பணிகளை ஜெகன் ஒதுக்கி விட்டார். மதுவிலக்கு கொண்டு வருவதாக கூறி, அதனை நிறைவேற்றவில்லை. மேலும், மிகவும் கீழ்த்தரமான மதுபானங்களை விற்றார்.

இண்டியா கூட்டணியில் பிரதமர்வேட்பாளர் யார் ? அந்த கூட்டணியில் அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. சரத்பவார், மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, ஸ்டாலின் இவர்களில் யாரை இவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளனர் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

மோடி மீண்டும் பிரதமர்: தர்மாவரம் கூட்டத்தில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: நாட்டிலும், மாநிலத்திலும்தர்மத்தை நிலை நாட்ட அனைவரும் தயாராகுங்கள். கடந்த 5 ஆண்டுகால ஜெகன் ஆட்சியில்ஆந்திராவிற்கு தலைநகரமே இல்லாமல் போய்விட்டது. அமராவதியை நாசம் செய்த அவரைவீட்டிற்கு அனுப்பியே தீர வேண்டும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்குவந்ததும், அமராவதியை தலைசிறந்த தலைநகரமாக்குவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 4 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கிடுவோம். வேலை கிடைக்கும் வரை இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குவோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு உறுதிபட கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x