Published : 04 May 2024 10:38 AM
Last Updated : 04 May 2024 10:38 AM

காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் சிவசேனாவில் இணைந்தார்

காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் (59), முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் நேற்று இணைந்தார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்தவர் சஞ்சய் நிருபம்.

கடந்த 1986-ம் ஆண்டில் செய்தியாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், பின்னர் பால் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். கடந்த 1996-ம் ஆண்டில் சிவசேனா சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2005-ம் ஆண்டில் சஞ்சய் நிருபம் காங்கிரஸில் இணைந்தார். கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை வடக்கு மும்பை மக்களவைத் தொகுதி எம்பியாக அவர் பதவி வகித்தார்.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு வடக்கு மும்பை தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதன் காரணமாக காங்கிரஸுக்கு எதிராக சஞ்சய் நிருபம் கருத்துகளை வெளியிட்டு வந்தார். கடந்த ஏப்ரல் 4-ம் தேதி காங்கிரஸில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே நாளில் அவர் காங்கிரஸில் இருந்து விலகினார்.

இந்த சூழலில் சஞ்சய் நிருபம், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் நேற்று இணைந்தார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவரை நேரில் வரவேற்று கட்சியில் இணைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சஞ்சய் நிருபம் கூறும்போது, “சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எனது சொந்த வீட்டுக்கு திரும்பி உள்ளேன். பால் தாக்கரேவின் சிந்தனைகள், கொள்கைகள் எனது ரத்தத்தில் கலந்திருக்கிறது. முதல்வர் ஷிண்டேவின் கரத்தை வலுப்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x