Published : 03 May 2024 07:16 AM
Last Updated : 03 May 2024 07:16 AM

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: நீதிமன்றத்தில் துஷார் மேத்தா வாதம்

துஷார் மேத்தா

புதுடெல்லி: மத்திய புலானாய்வு அமைப்பான சிபிஐ, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான பொது அனுமதியை மேற்கு வங்க அரசு திரும்பப் பெற்றது. இதனையும் மீறி, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்வதாக கூறி மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ் மத்திய அரசுக்கு எதிராக இந்த வழக்கை மேற்கு வங்க அரசு தாக்கல் செய்துள்ளது. இந்தப் பிரிவு மத்திய அரசுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சர்ச்சையை கையாளும் அதிகார வரம்பை உச்ச நீதிமன்றத்துக்கு வழங்குகிறது.

இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர், கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:

அரசியலமைப்பின் 131 வது பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கிய மிகப் புனிதமான அதிகார வரம்புகளில் ஒன்றாகும். எனவே இந்தப் பிரிவை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

மேற்கு வங்க மாநிலத்தின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் மத்திய அரசால் பதியப்பட்டதில்லை. சிபிஐ பதிவு செய்துள்ளது. மேலும், சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை. இவ்வாறு துஷார் மேத்தா வாதிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. 2018 நவம்பர் 16-ம் தேதியன்று மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான பொது அனுமதியை மேற்கு வங்க மாநில அரசு திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x