Published : 05 Apr 2018 08:57 AM
Last Updated : 05 Apr 2018 08:57 AM
ஆட்டம், பாட்டத்துடன் நடக்கும் திருமணங்களை நடத்தி வைக்க மாட்டோம் என தியோபந்த் மதரஸாவின் மவுலானா அசார் உசைன் அறிவித்துள்ளார். இவர், உத்தரபிரதேச மாநிலம் சஹாரான்பூரில் முஸ்லிம் திருமணங்களை நடத்தி வைக்கும் காஜி பொறுப்பிலும் உள்ளார்.
வட மாநிலங்களில் முஸ்லிம் திருமணங்களின்போது மாப்பிள்ளை ஊர்வலங்களில் மேளதாளங்கள் இடம்பெறுவது வழக்கம். பல திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் பாட்டு கச்சேரிகளும் நடைபெறும். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு உபி.யின் தியோபந்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற முஸ்லிம்களின் மதரஸாவான தாரூல் உலூம் மவுலானாக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தியோபந்த் மதரஸாவின் மவுலானா காஜி அசார் உசைன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இஸ்லாத்தில் மேளதாளம், ஆட்டம், பாட்டங்களுக்கு அனுமதி இல்லை. இவற்றுடன் நடைபெறும் திருமணங்கள் இஸ்லாத்துக்கு விரோதமானது. இனி அதுபோல் நடைபெறும் திருமணங்களை முன்னின்று நடத்தி வைக்க மாட்டோம்” என்றார்.
இதற்கு முன்பு ராஜஸ்தானிலும் முஸ்லிம் திருமணங்களை நடத்தி வைக்கும் காஜிகள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உதய்பூர் உட்பட பல நகரங்களில் மேளதாளம், கொண்டாட்டங்களுடன் நடைபெறும் திருமணங்களை நடத்தி வைக்க முடியாது என ஏற்கெனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT