Published : 24 Apr 2024 04:53 PM
Last Updated : 24 Apr 2024 04:53 PM

“ராஜ்நாத் சிங் அப்பட்டமாக பொய் சொல்வது ஏமாற்றம் அளிக்கிறது” - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

புதுடெல்லி: “ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதுபோன்ற அப்பட்டமான பொய்களைக் கூறி பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கிரேட்டர் நொய்டாவில் வாக்கு சேகரித்தபோது பேசுகையில், “சகோதர, சகோதரிகளே எனக்கு பிரதமரை நீண்ட நாட்களாக தெரியும். அவருடன் எனக்கு நீண்ட காலம் நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை.

நமது பிரதமர் சமூகத்தை பிளவுபடுத்த ஒருபோதும் நினைத்தது இல்லை. டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இருந்தார். நான் இன்றும் அவரை மதிக்கிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2006 டிசம்பர் 9 ஆம் தேதி பேசிய டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களில் யாருக்கேனும் முன்னுரிமை இருப்பின், அது சிறுபான்மையினருக்குத்தான், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தான் என்று கூறியிருந்தார்” என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரஸ் மக்களின் சொத்துகளை கைப்பற்றி, ஊடுருவல்காரர்களுக்கு தரும் என தேர்தல் அறிக்கையில் எந்த பக்கத்தில் உள்ளது? காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் நீங்கள் அதை படித்தீர்கள்?

கண்ணுக்குத் தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணத்தை அவர் படித்தாரா? இதுபோன்ற அப்பட்டமான பொய்களைக் கூறி பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x