Published : 24 Apr 2024 01:16 PM
Last Updated : 24 Apr 2024 01:16 PM

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சத்தீஸ்கர்: “எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறிக்க நினைக்கிறது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டில் 15 சதவீதத்தை மத அடிப்படையில் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.” என்று சத்தீஸ்கர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் நடந்து வரும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோதே அதில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாக கூறியிருந்தேன். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அம்பேத்கரின் வார்த்தைகள் மீது அக்கறை கொள்ளவில்லை. அரசியலமைப்பின் புனிதம் பற்றியும் கவலை கொள்ளவில்லை. நாட்டின் அரசமைப்பை காங்கிரஸ் மாற்ற நினைக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே, ஆந்திராவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முயற்சித்தது காங்கிரஸ். பின்னர் நாடு முழுவதும் அதனை அமல்படுத்தவும் திட்டமிட்டது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டில் 15 சதவீதத்தை மத அடிப்படையில் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.

காங்கிரஸின் மோசமான ஆட்சி நிர்வாகமும், அலட்சியமும்தான் நாட்டின் அழிவுக்குக் காரணம். தீவிரவாதம் மற்றும் நக்சல் அமைப்புகளுக்கு எதிராக பாஜக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அவற்றுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதோடு, அதுபோன்றவர்களை துணிச்சல்காரர்கள் என்று அழைக்கிறது. தீவிரவாதிகள் கொல்லப்படும்போது காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் கண்ணீர் வடிக்கிறார். இதுபோன்ற செயல்களால் தான் நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது.

வாரிசு வரி விதிக்கப் போவதாக காங்கிரஸ் சொல்லியுள்ளது. பெற்றோரிடமிருந்து பெற்ற பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறது. உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் சேர்க்கும் சொத்துக்களை காங்கிரஸ் பறிக்க நினைக்கிறது.” என்று பேசினார்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மதோபூர் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் சிலநாட்களுக்கு முன் கடைக்காரர் ஒருவர் அனுமன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்டார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்களை கேட்பது கூட குற்றமாக உள்ளது. ராஜஸ்தானினும் இத்தகைய பாதிப்பு உள்ளது. ராஜஸ்தானில் முதல்முறையாக இம்முறை ராம நவமிக்கு ஷோபா யாத்திரை ஊர்வலம் நடைபெற்றுள்ளது. மக்கள் ராம்-ராம் என முழக்கமிடும் ராஜஸ்தான் போன்ற ஒரு மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்திருந்தது.

மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை உடைத்து தங்களின் சிறப்பு வாக்கு வங்கிக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்க நினைத்தார்கள்.. அதேசமயம் அரசியலமைப்பு சட்டம் இதற்கு முற்றிலும் எதிராக உள்ளது. இடஒதுக்கீடு உரிமையை தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளுக்கு அம்பேத்கர் வழங்கினார். ஆனால் காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்பின.

திருப்திபடுத்துதல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் எப்போதும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக உள்ளது. 2004-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, அவர்கள் முதல் காரியமாக ஆந்திராவில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்தனர்.

காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் செயல்படுத்த விரும்பிய முன்னோடி திட்டமாக இது இருந்தது. 2004 முதல் 2010 வரை அவர்கள் முஸ்லிம் இடஒதுக்கீட்டை 4 முறை அமல்படுத்த முயன்றனர். ஆனால் சட்டரீதியான தடைகள் மற்றும் உச்ச நீதிமன்ற எச்சரிக்கை காரணமாக அமல்படுத்த முடியவில்லை.

2011-ல் இதை நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்க விரும்பியது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனத் தெரிந்தும் காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டது.” என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x